وَٱلْوَٰلِدَٰتُ يُرْضِعْنَ أَوْلَٰدَهُنَّ حَوْلَيْنِ كَامِلَيْنِ لِمَنْ أَرَادَ أَن يُتِمَّ ٱلرَّضَاعَةَ وَعَلَى ٱلْمَوْلُودِ لَهُۥ رِزْقُهُنَّ وَكِسْوَتُهُنَّ بِٱلْمَعْرُوفِ لَا تُكَلَّفُ نَفْسٌ إِلَّا وُسْعَهَا لَا تُضَآرَّ وَٰلِدَةٌۢ بِوَلَدِهَا وَلَا مَوْلُودٌ لَّهُۥ بِوَلَدِهِۦ وَعَلَى ٱلْوَارِثِ مِثْلُ ذَٰلِكَ فَإِنْ أَرَادَا فِصَالًا عَن تَرَاضٍ مِّنْهُمَا وَتَشَاوُرٍ فَلَا جُنَاحَ عَلَيْهِمَا وَإِنْ أَرَدتُّمْ أَن تَسْتَرْضِعُوٓا۟ أَوْلَٰدَكُمْ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ إِذَا سَلَّمْتُم مَّآ ءَاتَيْتُم بِٱلْمَعْرُوفِ وَٱتَّقُوا۟ ٱللَّهَ وَٱعْلَمُوٓا۟ أَنَّ ٱللَّهَ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஎவர் (எந்த தந்தை) பாலூட்டுவதை முழுமைப்படுத்த விரும்புகிறாரோ அவருக்காக, தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு முழுமையான ஈராண்டுகள் பாலூட்டுவார்கள். நல்ல முறையில் அவர்களுக்கு உணவளிப்பதும் ஆடை கொடுப்பதும் எவருக்காக குழந்தை பெற்றெடுக்கப்பட்டதோ அவர் (தந்தை) மீது கடமையாகும். ஓர் ஆத்மா அதன் வசதிக்கு மேல் நிர்பந்திக்கப்படாது. ஒரு தாய் தன் குழந்தைகளுக்காக துன்புறுத்தப்பட மாட்டாள். இன்னும் தந்தையும் தன் குழந்தைக்காக (துன்புறுத்தப்பட மாட்டார்). அது போன்றே வாரிசு தாரர் மீதும் (கடமையாகும்).அவ்விருவரும் தங்கள் பரஸ்பர திருப்தியுடனும் பரஸ்பர ஆலோசனையுடனும் பால்குடியை நிறுத்த நாடினால் அவ்விருவர் மீது(ம்) குற்றமே இல்லை. நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு (பிற பெண் மூலம்) பாலூட்டுவதை விரும்பினால் நீங்கள் கொடுப்பதை நல்ல முறையில் ஒப்படைத்தால் (அது) உங்கள் மீது குற்றமில்லை. அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை உற்று நோக்குபவன் என்பதையும் அறியுங்கள்.
Tamil Translation - Omar Sharifஎவர் பாலூட்டுவதை முழுமைப்படுத்த விரும்புகிறாரோ அவருக்காக, தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு முழுமையான ஈராண்டுகள் பாலூட்டுவார்கள். நல்ல முறையில் அவர்களுக்கு உணவளிப்பதும் ஆடை கொடுப்பதும் எவருக்காக குழந்தை பெற்றெடுக்கப்பட்டதோ அவர் (-குழந்தையின் உரிமையாளராகிய பிள்ளையின் தந்தை) மீது கடமையாகும். ஓர் ஆத்மா அதன் வசதிக்கு மேல் நிர்ப்பந்திக்கப்படாது. ஒரு தாய் தன் குழந்தைகளுக்காக துன்புறுத்தப்பட மாட்டாள். இன்னும், எவருக்காக குழந்தை பெற்றெடுக்கப்பட்டதோ அவரும் தன் குழந்தைக்காக (துன்புறுத்தப்பட மாட்டார்). அது போன்றே வாரிசுதாரர் மீதும் (கடமையாகும்). அவ்விருவரும் தங்கள் பரஸ்பர திருப்தியுடனும் பரஸ்பர ஆலோசனையுடனும் பால்குடியை நிறுத்த விரும்பினால் அது அவ்விருவர் மீதும் அறவே குற்றமில்லை. நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு (பிற பெண் மூலம்) பாலூட்டுவதை விரும்பினால், - நீங்கள் கொடுப்பதை நல்ல முறையில் (பாலூட்டும் தாய்க்குரிய கூலியை) ஒப்படைத்தால் - (அது) உங்கள் மீது குற்றமில்லை. இன்னும், அல்லாஹ்வை அஞ்சுங்கள். இன்னும், நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை உற்று நோக்குபவன் என்பதை அறியுங்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi233. எவரேனும் (‘தலாக்' கூறப்பட்ட மனைவிகளிடம் தங்களுக்குப் பிறந்த குழந்தைகளுக்குத் தலாக்குக் கூறப்பட்ட மனைவிகளைக் கொண்டே) பாலூட்டுவதை முழுமையாக்க விரும்பினால், தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு (அவை பிறந்ததிலிருந்து) இரண்டு ஆண்டுகள்வரை முழுமையாகப் பாலூட்டுவார்கள். தவிர (அத்தாய்மார்கள் பாலூட்டும் வரை) அவர்களுக்கு ஆடையும், உணவும் முறைப்படிக் கொடுத்து வருவது குழந்தையின் உரிமையாளரான தந்தை மீது கடமையாகும். ஓர் ஆத்மா அதன் சக்திக்கு மேல் (செய்யும்படியாக) நிர்பந்திக்கப்பட மாட்டாது. (ஆகவே,) குழந்தைக்காக (தனக்கு வேண்டிய உணவின்றியே பாலூட்டும்படி) அதன் தாயையோ அல்லது (சக்திக்கு அதிகமாகக் கொடுக்கும்படி) தந்தையையோ துன்புறுத்தப்பட மாட்டாது. தவிர, இவ்வாறே (குழந்தையின் தந்தை இறந்துவிட்டால் அதை பராமரிப்பது) வாரிசுகள் மீது கடமையாகும். (குழந்தையின் தாய், தந்தை) இருவரும் ஆலோசனை செய்து (குழந்தையின்) பால்குடியை (இரண்டு ஆண்டுகளுக்குள்) மறக்கடிக்க(வோ அல்லது தாயை விட்டுக் குழந்தையைப் பிரித்துவிடவோ) நாடினால் (அவ்வாறு செய்வது) அவர்கள் மீது குற்றமல்ல. மேலும், நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு செவிலித் தாயைக்கொண்டு பாலூட்டக் கருதி (அதுவரை பாலூட்டி வந்த பெற்றதாய்க்கு) நீங்கள் கொடுக்க வேண்டியதை முறைப்படிக் கொடுத்துவிட்டால் (அவ்வாறு செவிலித் தாயைக்கொண்டு பாலூட்டுவது) உங்கள் மீது குற்றமாகாது. (இவற்றில்) நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை உற்று நோக்குகிறான் என்பதையும் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்.